விசாரணையை அறிக்கையை வெளியிடுவது மனித உரிமை ஆணையாளரை பொறுத்தவிடயம்- அமெரிக்கா தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்றயுத்தக்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள் பற்றிய அறிக்கையை எப்போது வெளியிடுவது என்பதை தீர்மானிப்பது, மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹ{சைனை பொறுத்தவிடயம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜென் ஷகி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது இது குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறிப்பிட்ட அறிக்கையை எப்போது வெளியிடுவது என தீர்மானிப்பது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரை பொறுத்தவிடயம்,அமெரிக்கா அவர் மீதும் அவரது நடவடிக்கைகள் மீதும் முழுமையான நம்பிக்கையை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சரும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கெரியும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்,இந்த சந்திப்பின்போது இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது,
ஜனவரி 8ம் திகதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை மக்களுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையின் ஜனநாயக கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்கான ஆதரவு ஆகியவற்றை ஜோன் கெரி வெளியிட்டார். புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கான ஆதரவையும் அவர் வெளியிட்டார்.
30 வருட யுத்தத்தின் பின்னர் பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமெரிக்காவினதும், சர்வதேசசமூகத்தினதும், அர்ப்பணிப்பையும் அவர் வெளியிட்டார்.
சமாதானம், ஜனநாயகம்,நிலவும் அனைவரையும் உள்வாங்கிய தற்போதைய ஐக்கிய இலங்கைக்கான ஆதரவையும் கெரி வெளியிட்டார்.




