ஒன்ராறியோ மாகாண பெண்கள் விவகார அமைச்சருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் திரேசி மக் சார்ல்ஸ்ஸை வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கனடா மார்க்கம் நகர சபையுடன் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கனடா சென்றிருக்கும் முதலமைச்சர் அங்கு பல்வேறு அரசியல் சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார்.
வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதை திரேசி மக் சார்ல்சுடனான சந்திப்பில் எடுத்துக்கூறிய முதலமைச்சர் இந்தப் பெண்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவர்களின் வினைத்திறனை அதிகரித்து நம்பிக்கையூட்டவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியிருக்கும் சட்ட நியமங்கள் வாயிலாக, ஒன்ராறியோஅரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சரோடு வேறு பல விடயங்களையும் கலந்துரையாடிய திரேசி மக் சார்ள்ஸ் தமிழ் மக்களின் துயரத்தின் ஆழத்தைத் தான் புரிந்து கொள்வதாகவும் இப்பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களுக்குத் தாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகளைக் கண்டறிவதாகவும் குறிப்பிட்டார். வடமாகாணசபையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் இருப்பின் அவற்றை நிச்சயமாகப் பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.





