இந்திய வெளியுறவு செயலாளரை கூட்டமைப்பினர் சந்தித்தனர்
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பினர், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது கரிசனையையும் எடுத்துரைத்தனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான , மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய வெளியுறவு செயலாளரோடு, இலங்கைக்கான இந்திய தூதுவர், துணை செயலாளர்,மற்றும் உயர்ஸ்தானிக அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். -(3)





