ஹுன்னஸ்கிரியவில் போராட்டம் தொடர்கிறது : தொழிலாளர்களுக்கு ஆதரவாக படையெடுக்கும் இளைஞர்கள்
அரச தோட்ட காணிகளை தனியாருக்கு விற்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹுன்னஸ்கிரியவில் தோட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவுகள் பெருகியவன்னமுள்ளன.
நேற்று காலை முதல் இரவு பகலாக இந்த போராட்டம் ஹுன்னஸ்கிரிய நகரில் நடைபெற்று வருகின்றது.
இதற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தொழிலுக்கு செல்லாது அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகளினால் அவர்கள் வேலைக்கு வருமாறு அழைக்கப்பட்டு வராவிட்டால் வேலை இல்லாது போகுமெனவும் எச்சரித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் வேலைக்கு செல்லவில்லை.
இதேவேளை மஸ்கெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளிலிருந்தும் மக்கள் சென்று அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான வேலுக்குமாரும் அவ்விடத்திற்கு சென்றுள்ளபோதும் அதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இருந்தும் அவர் சில நேரம் அவ்விடத்திலேயே இருந்துள்ளார்.
தற்போது தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் அவ்விடத்திற்கு வந்த மாவட்ட தொழில் ஆணையாளர் நாளைய தினம் தேசிய அரசாங்க தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளருடன் விசேட பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரித்துள்ளார். எவ்வாறாயினும் தீர்வு கிடைக்கும் வரையிலான தமது போராட்டம் கைவிடப்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பல்வேறு பிரதேசங்களிலிருந்து இளைஞர்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அந்தப் பகுதிக்கு படையெடுத்தவண்ணமுள்ளனர். இதேவேளை அந்தப் பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். -(3)





