சிறந்த உயர்ந்த தலைவர் வாஜ்பாய்-1
பேராசிரியர்.மு.நாகநாதன்
சேற்றில் பூத்த செந்தாமரை என வாஜ்பாயைப் போற்றலாம்.
1999 தி.மு .க நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணியோடு கூட்டு வைக்க வேண்டாம் என்று கலைஞரிடமும், அண்ணன் மாறனிடமும் வலியுறுத்தினேன்.
ஆனால் மறைந்த செல்வி.ஜெயலலிதா தி.மு .க ஆட்சியை வாஜ்பாய் கலைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் , வாஜ்பாய் மறுத்த காரணத்தால், வாஜ்பாய்
ஆட்சிக்குத் தந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் அரசியல் நிலைகள் மாறின.
ஆனால் வாஜ்பாய் தி.மு.க வலியுறுத்திய பலத் திட்டங்களை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தினார்.
சான்றாக, மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா “டைடல் பார்க்” சென்னையில் தொடங்கப்பட்டது.
பிரதமர் வாஜ்பாய், தமிழக முதல்வர் கலைஞர், ஒன்றிய வணிகத் துறைஅமைச்சர் அண்ணன் மாறன், தொழில்நுட்ப அமைச்சர் பிரோமத் மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கணினித் துறையில் பல இலட்சம் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.
கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களைக் கலந்து கொண்டுதான் வாஜ்பாய் முடிவு மேற்கொண்டார்.
ஒரு தவறு நடந்தது என்றால் கூட கூட்டணியில் உள்ள கட்சி சங்கடப்படக்கூடாது என்பதற்காக வாஜ்பாய் சரியான முடிவுகளை மேற்கொண்டார்.

புதுடெல்லியில் ஓர் உயரிய அமைப்பிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் பரிந்துரையின் அடிப்படையில் உறுப்பினர் பதவிக்கு ஒருவர் நியமனம் செய்யப்பட்டார்
.
அப்போது அவர் மீது ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு ஊழல் குற்றம் செய்ததற்காக வழக்குப் பதிவு செய்து நிலுவையில் இருந்தது.
இதை பிரதமர் வாஜ்பாயிடம் அண்ணன் மாறன் கடுமையாக விமர்சித்தபோது, அந்த நபரின் முதன்மையான பொறுப்புகள் மாற்றப்பட்டன.
அதன் பிறகு அண்ணன் மாறனின் ஒப்புதலின்றி, ஒன்றிய அரசின் பதவிகளுக்கோ, ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக செயல்படவோ பிரதமர் அனுமதிக்கவில்லை.
1999 ஆம் ஆண்டில் கனடா நாட்டில் நடைபெற்ற முதல் உலகக் கூட்டாட்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, திரும்பி வரும்போது இலண்டன் மாநகரில் சில நாட்கள் தங்கியிருந்தேன்.
அப்போது புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் மறைந்த அறிஞர். ஆன்டன் பாலசிங்கம் என்னைச் சந்திக்க விரும்பினார்.
உடல்நலிவுற்ற அவரைச் சந்தித்துப் பல மணி நேரங்கள் உரையாடினேன்.
அப்போது சில காரணங்களுக்காக ஒன்றிய அரசின் உதவியை நாடினார்.
அண்ணன் மாறன் பிரதமர் வாஜ்பாயிடம் இதன் தொடர்பாக பேசி உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை திரும்பியவுடன் அண்ணன் மாறனிடம் இதன் தொடர்ச்சியாகப் பேசினேன்.
அண்ணன் மாறன் வேண்டுகோளை ஏற்று ஈழ மக்களின் உரிமைக்காகப்பெரும் உதவியை நல்கிய பெருந்தகைதான் மறைந்த தலைவர் அடல்ஜி.

இந்த உதவியைச் செய்ததற்காக அண்ணன் மாறனுக்கும், பிரதமர் வாஜ்பாயிக்கும் தம்பியும், பாலசிங்கமும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதுவெல்லாம் இன்றைய கத்துக்குட்டிகளுக்குத் தெரியாதல்லவா? வெட்டிப் பேச்சுகளும், வெற்று முழக்கங்களும் ஆரவார அரசியலாகிவிட்டதல்லவா?
வெளிநாட்டுக் கொள்கையை பிரதமர் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பின் தொலை நோக்குப் பார்வையோடு, நுட்பமாகக் கையாண்டவர் அட்டல்ஜி.




