கண்கள் எரிந்தன, வாயில் நுரை தள்ளியது, மூச்சு திணறல் ஏற்பட்டது- சிரியா இரசாயன வாயு தாக்குதலில் உயிர்தப்பியவர்கள் தகவல்
நியுயோர்க் டைம்ஸ்- தமிழில் சமகளம்
சிரியாவில் உள்ள தனது கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து தனது கிராமத்தவர்களை காப்பாற்றுவதற்காக அந்த விவசாயி தனது கிராமத்தை நோக்கி விரைந்தார். எனினும் முகமத் நெஜ்டாட் யூசுவ் குண்டுவீச்சு இடம்பெற்ற அந்த பகுதியை நெருங்கியதும், வெள்ளையும் இல்லாத மஞ்சளும் இல்லாத மாரிகால பனிமூட்டம் போன்ற ஓன்றை எதிர்கொண்டார்.
நான் சமநிலை இழக்க தொடங்கினேன் என அவர் குறிப்பிட்டார். எனது கண்கணில் எரிச்சல் உருவாகியது, எனது மூக்கிலிருந்து நீர் வடியத்தொடங்கியது வாயில் நுரை வந்தது என்கிறார் அவர். அவர் விசத்தை சுவாசித்துள்ளார். செவ்வாய்கிழமை இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
உயரமான வலுவான மனிதரான அவர் தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார். எனினும் காற்றில் கலந்த அந்த நச்சுப்புகை காரணமாக அவரது கர்ப்பிணி மனைவியும் உறவினரின் குழந்தையொன்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் துருக்கி எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரியா எல்லையிலுள்ள ரெய்கன்லி கிராமத்திலுள்ள சிறிய மருத்துவமனைக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இரசாயன தாக்குதலிற்கு உள்ளான கான் செய்க்கோன் கிராமத்தை சேர்ந்தவர்கள்- இட்லிப்பில் கிளர்ச்சிக்காரர்கள் பிடியிலுள்ள நகரம் அது.
அங்கு நின்றிருந்த ஓருவர் தனது கையடக்கதொலைபேசியில் வந்த தகவல் ஓன்றை காண்பித்தார். அதில் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்ட 46 பேரின் பெயர் விபரங்கள் காணப்பட்டன. நான் மயக்கமடைந்த நிலையில் இங்கு எடுத்துவரப்பட்டுள்ள எனது மனைவி குறித்து கவலையடையவில்லை, ஆனால் சிரியாவில் உள்ள எனது உறவினர்கள் குறித்து கவலையடைகிறேன் என யூசுவ் எங்களிடம் தெரிவித்தார்.
இரசாயன தாக்குதலில் காயமடைந்த பலர் இன்னமும் துருக்கி வரவில்லை என்றார் அவர். கிளர்ச்சிக்காரர்களின் சுகாதார அமைச்சர் மருத்துவமனைகள் நிரம்பிவழிவதாக தெரிவித்தார். மருத்துவமனையொன்றிற்கு 100 ற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். அவர்கள் மூச்சுதிணறல், வாயிலிருந்து நுரை வருதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மயக்கமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அது ஓரு அதிர்ச்சிதரும் நடவடிக்கை சிரியாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகம் அறிந்து வைத்துள்ளது, இரசாயன தாக்குதலே இடம்பெற்றது என்பதை உலகிற்கு நிருபிப்பதற்காக நாங்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கப்போகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
குண்டு சத்தம் கேட்டதும் மக்களை காப்பாற்ற செல்வது வழமை என தெரிவித்த கிளர்ச்சிக்குழுவை சேர்ந்த ஓருவர் சத்தம் கேட்டதும் நான் அந்த இடத்திற்கு விரைந்தேன், அது வழமைக்கு மாறான சத்தம், அங்கு சென்றுகொண்டிருக்கும் வேளை எனது கண்கள் எரியத்தொடங்கின, நான் மூச்சுத்திணறுவதை உணர்ந்தேன், எனது கண்முன்னால் பலர் நிலத்தில் விழுந்து இறந்தனர் அது சகிக்க முடியாத காட்சி என குறிப்பிட்டார்.