செய்திகள்

கண்மணிகாள் நீங்கள் என்றென்றும் எம் காவல் தெய்வங்கள்

அஞ்சாத நெஞ்சுரம் கொண்டு
கண் துஞ்சாது களமதில்
கந்தகப் புகைக்குள்ளும் கடும்குண்டு மழைக்குள்ளும்
வெந்து வேகி சன்னங்கள் உடல்துளைக்க விழுப்புண் ஏந்தி
செங்குருதி சிந்தி எங்கள் இனம் வாழ உயிரீந்தீர்கள் !

மண்காத்து மறதமிழர் மரபுவழிவந்த மானம் காத்து;
பண்பாடு காத்து பாருள்ள தமிழர்தம் முகவரி காத்து;
எண்ணரும் தியாகங்கள் புரிந்து எங்களைக் காத்த
கண்மணிகாள் நீங்கள் என்றென்றும் எம் காவல் தெய்வங்கள் !

உங்களைப் புதைத்த கல்லறைகளை சிதைத்த பகைவனால்
நீங்கள் எம்முள் விதைத்து சென்ற விடுதலை கங்குகளை அணைக்க முடியவில்லை -அதை
அழிக்க நினைக்கையில் பெரும் அனலாய் மாறி அவன் கதை முடிக்கும்
அடுத்த அடுத்த தலைமுறை நெஞ்சிலும் உங்களுக்காய் கார்த்திகை தீபங்கள் ஏற்றும் !

                                                                                                                -கொற்றவை