செய்திகள்

தனியார் நிறுவனம் ஒன்றில் முரண்பாடு: தடுக்க சென்ற குடும்பப் பெண் காயம்

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவரின் கணவருக்கும், அந்த நிறுவனத்தின் முகாமையாளருக்கும் ஏற்பட்ட மேதலில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (30.01) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இயங்கிவரும் சர்வதேச தரம் பெற்ற தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடந்த பல வருடங்களாக 23 வயதான பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவரும் அதே நிறுவனத்தில் வேறு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் சம்பளப்பணத்தினை கடந்த மாதத்திலிருந்து முகாமையாளர் நிறுத்தி வைத்துள்ளார். இதையடுத்து பெண்ணின் கணவர் முகாமையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மனைவியின் சம்பளப்பணத்தினை பெற்றுத்தருமாறு கோரியபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையினை விலக்கச் சென்ற இந்த பெண்மீது தலைக்கவசத்தினால் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்திய முகாமையாளரை பொலிஸார் இன்று வரையில் கைது செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முகாமையாளர் தற்போது மன்னார் சென்றுள்ளதாக குறித்த காப்புறுதி நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5